பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநராகவும் தனது பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக அவரது அரசியல் மற்றும் திரைப்படப் பணிகள் அதிகரித்தன. இதனால் அவர் நடிக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் குறைந்தது. கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தில் கங்கனா நடித்திருந்தார். தற்போது அவரது நடிப்பில் ‘பாரத் பாக்ய விதாதா’ என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இந்திய தேசிய கீதத்தில் இடம்பெறும் இந்த வார்த்தைகள் திரைப்படத்தின் தலைப்பாக அமைந்ததற்கு நடிகர் ஜான் ஆபிரகாம்தான் முக்கிய காரணம் என்று கங்கனா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கங்கனா ரணாவத், “இந்த திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் ‘நர்ஸஸ் ஆப் காமா’ என்ற தலைப்பைத் தேர்வு செய்திருந்தோம். ஆனால் திரைப்படத்தின் முழுக் கதையையும் ஆராய்ந்தபோது அந்த தலைப்பு கதையின் உணர்வுகளுக்கும் நோக்கத்திற்கும் முழுமையாக பொருந்தவில்லை என்பதை உணர்ந்தோம். குறிப்பாக இந்த திரைப்படம் இந்தியாவின் ஆன்மாவையும், சாதாரண மக்களின் துணிச்சலையும், தியாக உணர்வையும் பிரதிபலிப்பதாக இருப்பதால் ‘பாரத் பாக்ய விதாதா’ என்ற தலைப்புதான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தோம்” என்று கூறினார்.
அதே நேரத்தில், அந்தத் தலைப்பு ஏற்கனவே நடிகர் ஜான் ஆபிரகாமின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேரடியாகத் தொடர்புகொண்டு தலைப்பைப் பயன்படுத்த அனுமதி கேட்டோம். அப்போது அவர் எந்தவித தயக்கமும் இன்றி, எந்த கட்டணமும் கோராமல், ஒரே நாளில் அந்த தலைப்பை எங்களுக்காக விட்டுக் கொடுத்தார். அவரது இந்த பெருந்தன்மையான உதவிக்காக இந்த தருணத்தில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கங்கனா ரணாவத் தெரிவித்தார்.
