கர்நாடகாவின் புதிய முதல்வராக டி.கே. சிவக்குமார் நேற்று மாலை பதவியேற்றுக் கொண்டார். மக்கள் மாளிகை எனப்படும் லோக் பவனில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களான சிவராஜ்குமார், ரமேஷ் அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் நடிகர் சிவராஜ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மீது மாநில மக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்புகளை அவர் முழுமையாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “குறிப்பாக விவசாயம் மற்றும் கல்வித் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பமாகும். ஏனெனில் கல்வி மட்டுமே ஏழை மக்கள் உட்பட அனைத்து தரப்பினரின் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தை உருவாக்கக்கூடிய சக்தியாக உள்ளது. எனவே கல்வித் துறையின் வளர்ச்சிக்காக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்தார்.
