இயக்குநராக பல வெற்றிப் படங்களை வழங்கிய பின்னர் நடிகராகவும் பிசியாக வலம் வரும் பாலாஜி சக்திவேல், தற்போது ‘ஆப் தி ரெக்கார்ட்’ என்ற பைலட் திரைப்படத்தில் கதையின் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஏ.ஆர். முத்துராமன் எழுதி இயக்கியுள்ளார். காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் சாதாரண மனிதர் ஒருவருக்கும் இடையே உருவாகும் உணர்வுப்பூர்வமான மோதல், மன அழுத்தம், பதற்றமான சூழ்நிலைகள் மற்றும் எதிர்பாராத சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
மொத்தம் 12 நிமிடங்கள் ஓடும் இந்த பைலட் திரைப்படம், யதார்த்தமான காட்சியமைப்புகளுடன் பார்வையாளர்களுக்கு உணர்ச்சிகரமான அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுகிய நேரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக கதையும் திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த படத்தில் பாலாஜி சக்திவேலுடன் ருக்மணி, கொட்டாச்சி, ஆறு பாலா, பிரதீப் மற்றும் மீசை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபாகரன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ள நிலையில், நரேந்தர் இசையமைத்துள்ளார். மேலும், தற்போது பைலட் வடிவில் உருவாகியுள்ள ‘ஆப் தி ரெக்கார்ட்’ திரைப்படம் விரைவில் முழுநீள திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த முழுநீள திரைப்படத்திலும் பாலாஜி சக்திவேல் கதாநாயகனாகவே தொடர்ந்தும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
