நடிகர் ஜெய் கடந்த 22 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவரது திரைப்பயணத்தில் ‘சுப்ரமணியபுரம்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’, ‘சென்னை 28’ உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வளவு வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும், இன்னும் ஒரு பெரிய வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணித்து வருகிறார் ஜெய்.
சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது திரைப்பயணம் குறித்து மனம் திறந்து பேசிய அவர், நல்ல கதைக்காக நீண்ட காலம் காத்திருந்தது தனது வாழ்க்கையில் தவறான முடிவாக அமைந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஒரு வெற்றிப்படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்தது தற்போது நினைத்துப் பார்க்கும்போது சரியான முடிவாக தெரியவில்லை என்றார். அந்த காலகட்டத்தில்தான் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி போன்ற பல புதிய நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தங்களுக்கென தனி இடத்தை பிடித்தனர் என்றும் கூறினார்.
மேலும், ஒரு கதையை நிராகரித்து அதைவிட சிறந்த கதைக்காக காத்திருந்தபோது, அந்த வாய்ப்புகள் பல புதிய நடிகர்களிடம் சென்றுவிட்டதாக ஜெய் தெரிவித்தார். சிறிய இடைவெளி எடுத்தாலே புதிய நடிகர்கள் வந்து விடுகிறார்கள். அதே நேரத்தில் இடைவெளி விடாமல் தொடர்ந்து நடித்தாலும், அந்த படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறுவதில்லை. இதற்கான சரியான தீர்வும், தன்னை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பும் இன்னும் கிடைக்கவில்லை என்று அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
