நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி வரும் தனுஷின் 55-வது திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் ஆகிய இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றன. இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், கதாநாயகிகளாக ஸ்ரீ லீலா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தில் தனது சிறப்பான மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் பாராட்டுகளை பெற்ற மலையாள நடிகர் இந்திரன்ஸ், தற்போது தனுஷின் 55-வது திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அவரைச் சார்ந்த காட்சிகளின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கவில்லை என்றும், விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
—
