கபில்தேவ், தோனி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் அணியின் பல முன்னணி வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் கடந்த சில ஆண்டுகளில் பாலிவுட் திரைப்படங்களாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் தற்போது, ‘பெங்கால் புலி’ என்று அழைக்கப்படும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக உருவாகி வருகிறது.
‘தாதா: ஒரு கதை’ என்ற பெயரில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில், சவுரவ் கங்குலி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடித்துவருகிறார். ஏற்கனவே மும்பை நகரில் இந்த திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் முக்கியமான காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
மேலும், சவுரவ் கங்குலியின் இளம் வயது சம்பவங்களை மையமாகக் கொண்ட காட்சிகள், அவர் வாழ்ந்த பெஹாலா பகுதியில் அமைந்துள்ள அவரது சொந்த வீட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருவதால், சவுரவ் கங்குலியும் அவ்வப்போது நேரில் வந்து படப்பிடிப்பைப் பார்வையிட்டு வருகிறார். குறிப்பாக, காட்சிகள் மிகவும் தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக, படக்குழுவினருக்கு அருகிலிருந்தே சில ஆலோசனைகளையும் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
