ரவி மோகன் நடிப்பில் வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதனைத் தொடர்ந்து ‘லவ் டுடே’ திரைப்படத்தை தானே இயக்கி, கதாநாயகனாகவும் நடித்தார். இத்திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அதன்பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ மற்றும் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘டியூட்’ ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தார். இந்த படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக அவர் நடித்த முதல் மூன்று படங்களும் ரூ.100 கோடி வசூலை கடந்ததால், பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் மேலும் உயர்ந்தது.இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடித்த ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல், சுமார் ரூ.70 கோடி வசூலிலேயே நின்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அடுத்ததாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குவதுடன், அதில் கதாநாயகனாகவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் தற்போது அவர் தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இதற்காக தனியாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ள பிரதீப் ரங்கநாதன், தனது தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ‘டியூட்’ திரைப்படத்தில் அவருடன் நடித்த மமிதா பைஜூவை கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் அமைதியாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
