உலகம் முழுவதும் உள்ள திரை ரசிகர்களால் மிகுந்த மரியாதையுடன் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், தமிழில் உருவாகியுள்ள “தாழ் திறவா” திரைப்படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. Barman Pictures நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குநர் பரணி சேகரன் இயக்கியுள்ளார். நடிகர்கள் ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் ஹாரர் திரில்லர் திரைப்படமாக அமைந்துள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில் நேற்று திரையிடப்பட்ட இந்த டீசர், சர்வதேச ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களிடையே பாராட்டுகளை குவித்துள்ளது. உலக அளவில் மிகுந்த கவனத்தைப் பெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு தமிழ்ப்படத்தின் டீசர் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றிருப்பது தமிழ் சினிமாவிற்கு பெருமையாக பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் கதை, ஒரு கிராமத்தில் கண்டுபிடிக்கப்படும் பழமையான எழுத்துக்கள் மற்றும் அதன் பின்னணியில் மறைந்து கிடக்கும் மர்மமான ஆபத்துகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தமிழில் அகழ்வாராய்ச்சி பின்னணியுடன் ஹாரர் மற்றும் அமானுஷ்ய அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள அரிய முயற்சியாக “தாழ் திறவா” உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளன. முதல் போஸ்டரில், இருள் சூழ்ந்த அறையில் சுவரிலிருந்து நீளும் மர்மக் கைகள் நடிகை வாணி போஜனை இழுத்துச் செல்ல முயல்வதையும், அவரைக் காப்பாற்ற நடிகர் ஆதவ் கண்ணதாசன் பதட்டத்துடன் ஓடி வருவதையும் காண முடிகிறது.
அதேபோல் இரண்டாவது போஸ்டரில், பழமையான மாளிகை, மர்மமான சூழ்நிலை, அமானுஷ்ய சம்பவங்களை கண்டு பயத்தில் உறையும் குழந்தைகள் மற்றும் ஒரு ரகசிய கதவை திறக்க முயலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கதாபாத்திரங்களின் முகபாவனைகளிலும், காட்சிகளின் வடிவமைப்பிலும் திகிலும் பதட்டமும் நிரம்பியிருப்பதால், இப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான ஹாரர் அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளதுடன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு மற்றும் ஷ்யாம் பிரசாத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் குழந்தை நட்சத்திரங்களான லிஷா மற்றும் லலித் ஆகியோரும் கதையின் முக்கியமான பகுதிகளில் இடம்பெற்றுள்ளனர். தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
