இந்திய சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக திகழும் நடிகர் அமிதாப் பச்சன், பாலிவுட்டின் “ஷஹென்ஷா” என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். 1969 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான அவர், ‘ஷோலே’, ‘டான்’, ‘தீவார்’, ‘குலி’, ‘பா’, ‘பிகூ’ உள்ளிட்ட ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ள அமிதாப் பச்சன், இந்திய திரையுலகில் அழியாத தடம் பதித்தவர் எனப் பார்க்கப்படுகிறார்.
இந்த நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வேகமாக பரவின. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், பலரும் சமூக வலைதளங்கள் மூலம் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பதிவுகள் வெளியிட்டு வந்தனர்.
ஆனால், அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்தி மட்டுமே என்று அவரது குடும்பத்தினரும் நெருங்கிய வட்டாரங்களும் விளக்கம் அளித்துள்ளனர். அவர் வழக்கமான மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றதாகவும், பரிசோதனை முடிந்ததும் வீடு திரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது அமிதாப் பச்சன், ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகத்திலும், இயக்குநர் ரிபு தாஸ்குப்தா இயக்கும் ‘செக்சன் 84’ திரைப்படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
