இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கத்தில் நடிகர் நானி மற்றும் மோகன் பாபு உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துவரும் பான் இந்தியா திரைப்படம் ‘தி பாரடைஸ்’. தெலுங்கில் மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. இதற்கிடையில், ஏற்கனவே படமாக்கப்பட்ட சில காட்சிகள் நடிகர் நானிக்கு திருப்திகரமாக அமையவில்லை என்றும், அவை மீண்டும் மறுபடப்பிடிப்பு செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், இந்த காரணத்தால் படம் வெளியாகும் முன்பே தயாரிப்பாளருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. ஆனால், இந்த தகவல்களை தயாரிப்பு நிறுவனம் முற்றிலும் மறுத்துள்ளது.
இதுகுறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “கடந்த சில நாட்களாக ‘தி பாரடைஸ்’ திரைப்படம் தொடர்பாக பல்வேறு ஆதாரமற்ற வதந்திகளும் யூகங்களும் பரப்பப்பட்டு வருகின்றன. அதனால் உண்மையான நிலையை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ‘தி பாரடைஸ்’ திரைப்படம் ஆரம்ப கட்டத்திலிருந்தே தெளிவான திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து பணிகளும் திட்டமிட்டபடியே சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 100 நாட்களுக்கும் அதிகமான படப்பிடிப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
மீதமுள்ள படப்பிடிப்புகளும் எந்தவித தாமதமுமின்றி திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. இதுவரை இந்த திரைப்படத்தில் ஒரு காட்சி கூட மறுபடப்பிடிப்பு செய்யப்படவில்லை. அதேபோல், எதிர்காலத்திலும் எந்தவொரு மறுபடப்பிடிப்பும் நடத்த திட்டமிடப்படவில்லை. படத்தின் ஒவ்வொரு கட்ட பணியும் ஆரம்பத்தில் எவ்வாறு பிரம்மாண்டமாகவும் துல்லியமாகவும் கற்பனை செய்யப்பட்டதோ, அதே தரத்திலும் அர்ப்பணிப்புடனும் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எங்கள் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் தகவல்களை மட்டுமே அனைவரும் நம்புமாறு கேட்டுக் கொள்கிறோம். இனி வரும் நாட்களில் இப்படம் குறித்து வெளியாகும் தவறான தகவல்களுக்கு நாங்களே நேரடியாக பதிலளிப்போம். ‘தி பாரடைஸ்’ திரைப்படம் திட்டமிட்டபடி சிறப்பாக முன்னேறி வருகிறது. மேலும், இந்த படம் வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
