தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சூர்யா, தற்போது இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ள நிலையில், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நீதிமன்ற வழக்கை மையமாகக் கொண்டு அதனுடன் கடவுள் பக்தி மற்றும் சமூக உணர்வுகளை இணைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பம் முதலே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. பலமுறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், தற்போது இந்த திரைப்படம் வருகிற மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளதால், தற்போது படக்குழு தீவிரமான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. விரைவில் திரைப்படத்தின் டிரெய்லரும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு உற்சாகமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “சொன்ன தேதியில சொன்ன சொல்படி கருப்பன் வருவான்!!!… பட்டாசு எடுத்து வைங்க… பண்டிகை வரப்போகுது…!!!” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
