சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 99 திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தது திரைத்துறையினருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்த தயாரிப்பாளராக விளங்கியதால், பலரும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குநர் விக்ரமன் வெளியிட்டுள்ள வீடியோவில், “நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்த நான் பல சிரமங்களை சந்தித்தேன். உதவி இயக்குநராக பசியுடன் அலைந்துகொண்டிருந்த காலத்தில், ‘புது வசந்தம்’ திரைப்படத்தை தயாரித்து என்னை இயக்குநராக மாற்றியவர் ஆர். பி. சௌத்ரி. அந்த நன்றிக்காக என் வீட்டிற்கே ‘புது வசந்தம்’ என்று பெயர் வைத்துள்ளேன். இன்று நான் நிம்மதியாக வாழ்கிறேன் என்றால், அதற்கு காரணம் அவர் அளித்த உதவிதான். அவரின் மறைவை ஏற்க முடியவில்லை. 99 திரைப்படங்களை தயாரித்த அவர், 100வது திரைப்படத்தை காணாமல் போனது மிகுந்த வேதனை அளிக்கிறது” என்று கண்கலங்கிப் பேசியுள்ளார்.
—
