மலையாள திரைப்பட உலகில் 2013ஆம் ஆண்டு வெளியான ‘திரிஷ்யம்’ மற்றும் 2021ஆம் ஆண்டு வெளியான ‘திரிஷ்யம் 2’ ஆகிய இரு பகுதிகளும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இந்த இரண்டு படங்களிலும் மோகன்லால் அவர்களின் இளைய மகளாக நடித்தவர் எஸ்தர் அனில் ஆவார். முதல் பாகத்தில் நடித்த போது 11 வயது சிறுமியாக இருந்த அவர், தற்போது 24 வயது இளம் நடிகையாக வளர்ந்துள்ளார். மேலும், விரைவில் வெளியாக உள்ள ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்திலும் அவர் மீண்டும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இந்தப் படங்களில் நடித்த அனுபவத்தைப் பற்றி சமீபத்திய பேட்டியில் பேசிய எஸ்தர் அனில், மோகன்லாலிடம் இருந்து தாம் கற்றுக் கொண்ட முக்கியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஒரு குழந்தைத்தனம் எப்போதும் இருக்கும். அந்த இயல்பை எப்போதும் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்பதையே மோகன்லாலை கவனித்து நான் கற்றுக் கொண்டேன்,” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, “வாழ்க்கையில் நடக்க வேண்டியவை இயல்பாக நடக்கட்டும். எந்த விஷயத்தையும் மிகையாகப் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டாம் என்பதையும் அவர் எனக்குக் கற்றுத் தந்தார். மோகன்லால் எப்போதும் கவலைகளை வெளிப்படுத்துவதில்லை. இன்று என்னைப் பற்றி என்ன எழுதினார்கள், நாளை என்ன எழுதப் போகிறார்கள், இன்று நல்ல நாளா அல்லது மோசமான நாளா என்ற எந்த விஷயத்தையும் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். அந்த மனநிலையையும் நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டு பின்பற்றி வருகிறேன்,” என்று கூறியுள்ளார்.
