மலையாள சினிமாவில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த மல்டி ஸ்டாரர் திரைப்படமாக ‘பேட்ரியாட்’ உருவாகியுள்ளது. இதில் மம்முட்டி, மோகன்லால், குஞ்சாக்கோ போபன், பஹத் பாசில் மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற மே 1ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த திரைப்படம் ராணுவ பின்னணியில் உருவாகியுள்ளதுடன், தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டதால், இது ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது என்ற கருத்து நிலவி வந்தது.
ஆனால், சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மம்முட்டி இதுகுறித்து விளக்கமளித்தார். அவர் கூறுகையில், “இது பான் இந்தியா திரைப்படம் அல்ல, இந்தக் கதையின் மையம் கேரளாவைச் சுற்றி அமைந்துள்ளது. அதே நேரத்தில், கேரளாவைத் தாண்டியும் இந்தப் படம் ரசிகர்களை ஈர்க்கும். சமீப காலமாக ரசிகர்களின் ரசனை மேம்பட்டு வருகிறது. அவர்களுக்கு ஒரு சிறந்த சினிமா அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மலையாள சினிமாவில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் படமாக இது இருக்கும். மேலும், இதைத் தொடர்ந்து பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் உருவாகும் பாதையை இது திறக்கும் என்று தெரிவித்துள்ளார்.
