நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜய், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு தனது வேட்பாளர்களுடன் களம் கண்டார். இந்தத் தேர்தலின் முடிவுகள் வருகிற மே 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இடைப்பட்ட காலத்தில் அவர் ஆன்மிகப் பயணங்களில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று, பட்டு வேட்டி சட்டை அணிந்து சுவாமி தரிசனம் செய்தார்.
இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 29) சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு விஜய் பயணம் செய்தார். அங்கு அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சாய்பாபாவை அவர் பக்தியுடன் வழிபட்டார்.
மேலும், தனது தாயார் ஷோபா சந்திரசேகரின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, விஜய் சென்னை கொரட்டூர் வெங்கடேஷ்வரா நகரில் ‘சாயி மந்திர்’ என்ற பெயரில் சாய்பாபா கோயிலை அமைத்து, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி கும்பாபிஷேகமும் நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
—
