பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகையுமான பிரீத்தி ஜிந்தா, பெண்கள் குறித்து பகிர்ந்த தனது கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் போட்டிகளின் போது மைதானத்திற்கு நேரில் வந்து தனது அணியை உற்சாகப்படுத்தி வரும் பிரீத்தி ஜிந்தா, சமீபத்தில் ரசிகர்களுடன் இணையத்தில் உரையாடினார். அப்போது ஒரு ரசிகை, “பஞ்சாப் கிங்ஸ் அணியின் உண்மையான கோப்பையே நீங்கள்தான்” என்று பாராட்டுக்களை தெரிவித்தார்.
அந்த கருத்துக்கு நன்றி தெரிவித்த பிரீத்தி ஜிந்தா, பெண்களைப் பற்றிய தனது வலுவான நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில், “எந்தப் பெண்ணும் ஒரு ‘கோப்பை’ போல இருக்க விரும்புவதில்லை. கோப்பைகள் என்பது ஒருவரின் சொத்து, ஆனால் பெண்கள் யாருக்கும் சொந்தமானவர்கள் அல்ல. கோப்பைகள் கண்ணாடி அலமாரிகளில் பூட்டி வைக்கப்படுகின்றன. ஆனால் பெண்களுக்கு உரிய இடம் உங்கள் வாழ்க்கையிலும், உங்கள் இதயத்திலும் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். பெண்களை பொருளாக அல்லாமல் மதிப்புடன் அணுக வேண்டும் என்ற அவரது இந்த கருத்து பலரிடமும் பாராட்டைப் பெற்று வருகிறது.
