நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை த்ரிஷா இருவரும் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். சித்தார்த் தேர்ந்தெடுக்கும் கதைகளில் மட்டுமே நடித்துவரும் நடிகராக அறியப்படுகிறார்; அதேபோன்று சமீபகாலமாக த்ரிஷாவும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் முதன்முதலாக தமிழில் ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தின் மூலம் இணைந்து நடித்தனர். அதன் பின்னர் தெலுங்கில் ‘நுவ்வோஸ்தானந்தே நேனோடண்டானா’ என்ற படத்தில் இணைந்தனர். தொடர்ந்து 2016ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘அரண்மனை 2’ திரைப்படத்திலும் இருவரும் மீண்டும் ஒன்றிணைந்தனர்.
தற்போது, நான்காவது முறையாக சித்தார்த் மற்றும் த்ரிஷா இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறை தெலுங்கு மொழியில் உருவாகும் புதிய திரைப்படத்தில் இவர்கள் இருவரும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க, புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்தத் திட்டம் தொடர்பான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
