நடிகர் ஆர்யா நடித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் ஏப்ரல் 17ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. உளவு த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ‘எஃப்.ஐ.ஆர்’ திரைப்படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் கவுதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்தப் படத்திற்குப் பிறகு, ஆர்யா தனது அடுத்தடுத்த படங்களாக ‘வேட்டுவம்’, ‘சார்பட்டா 2’ போன்ற பெரிய திட்டங்களை கைவசம் வைத்துள்ளார். ‘மிஸ்டர் எக்ஸ்’ வெளியீட்டிற்குப் பின்னர், ‘ஆனந்தன்காடு’ திரைப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் வகையில், தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாகும் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆர்யாவின் 40வது திரைப்படத்தை ‘ப்ரணயவிலாசம்’ படத்தை இயக்கிய நிகில் முரளி இயக்கவுள்ளார். காதல் மற்றும் நகைச்சுவை கலந்து உருவாகும் இந்தப் படத்தில் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, காதல் கதையில் ஆர்யா மீண்டும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ‘மதராசபட்டினம்’, ‘ராஜா ராணி’, ‘காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதற்கிடையில், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தில் ஆர்யா தற்போது நடித்துவருகிறார். புதிய கதைக்களத்துடன், ‘மல்லர் கம்பம்’ விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம், விளையாட்டு மற்றும் கற்பனை அம்சங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.அதனைத் தொடர்ந்து, ஜூன் மாதம் முதல் ‘சார்பட்டா 2’ திரைப்படத்தின் பணிகளும் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
