இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் ஷாருக்கான், தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். ‘வார்’ மற்றும் ‘பதான்’ போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநருடன் மீண்டும் இணைந்துள்ள இந்தப் படத்தில், ஷாருக்கானின் மகளான சுஹானா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அனில் கபூர், ராணி முகர்ஜி, தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ள நிலையில், இசையை அனிருத் அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கிங்’ திரைப்படத்தின் தலைப்பு டீசர் வெளியிடப்பட்டது. இப்படத்திற்காக பாலைவனப் பகுதியில் அனில் கபூர் மற்றும் சுஹானா கான் கலந்து கொள்ளும் ஆக்சன் காட்சிகளை படமாக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக வரும் 9ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர் பதற்ற நிலை காரணமாக அந்தத் திட்டத்தை படக்குழு தற்போது ரத்து செய்துள்ளது. இதற்கு மாற்றாக, மும்பை நகரின் விலே பார்லே பகுதியில் பிரமாண்டமான செட் அமைத்து அந்தக் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இந்தத் திரைப்படம் வருகிற டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
