‘காந்தாரா’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் மூலம் இந்திய அளவில் பெரும் புகழைப் பெற்ற கன்னட நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி, சமீபத்தில் தனது சமூக வலைதள நடவடிக்கைகள் காரணமாக பேசுபொருளாகியுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு, ‘காந்தாரா’ படத்தை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து ‘அன்பாலோ’ செய்தார்.
இதனைத் தொடர்ந்து, அவருடன் இணைந்து பணியாற்றிய நடிகை ருக்மிணி வசந்த் மற்றும் நடிகர் ராஜ் பி ஷெட்டி ஆகியோர்களையும் அவர் ‘அன்பாலோ’ செய்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதனால் உருவான விவாதங்கள் இன்னும் அடங்காத நிலையில், தற்போது அவர் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும், அரசியல்வாதிகளும் உட்பட பலரையும் ‘அன்பாலோ’ செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை சுமார் 140 பேரை பின்தொடர்ந்து வந்த அவர், தற்போது தனது மனைவி பிரகதி, தனது தயாரிப்பு நிறுவனம் ரிஷப் ஷெட்டி பிலிம்ஸ் மற்றும் தனது அறக்கட்டளையான ரிஷப் ஷெட்டி அறக்கட்டளை ஆகியவற்றை மட்டும் பின்தொடர்கிறார். தொடர்ந்து நடந்த இந்த ‘அன்பாலோ’ நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அவர் தனது கணக்கை சுத்தப்படுத்தும் நோக்கில் இதை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து இனி தான் தெளிவாகும் என கூறப்படுகிறது.
