பிரபல இந்தி திரைப்பட நடிகையான பூமி பட்னேகர், சினிமாவில் பெண்களை மையமாகக் கொண்ட கதைகள் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ‘தம் லகா கே ஹைசா’, ‘சாண்ட் கி ஆங்க்’, ‘சோஞ்சிரியா’, ‘பதாய் ஹோ’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள அவர், தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட அவர், அங்கு பல முக்கியமான கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
அவர் தனது உரையில், “சினிமாவில் பெண்களை மையமாகக் கொண்ட கதைகள் குறைந்து வருவது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. ஆனால், இணையத் தளங்களில் வெளியாகும் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குகின்றன. அவற்றில் பெண்கள் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடிக்க முடிகிறது. அந்த வகையில், இணையத் தளங்கள் பெண்களுக்கு ஒரு சரியான மேடையாக அமைந்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
பூமி பட்நேகர் சமீபத்தில் ‘டல்டல்’ எனும் குற்றத் திகில் தொடரில் நடித்திருந்தார். இந்த தொடர் மும்பையில் நடைபெறும் தொடர் கொலை வழக்கை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தொடர் இணையத் தளத்தில் வெளியாகி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
