டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடித்த மலையாள படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10ம் தேதி தமிழிலும் ரிலீஸாகிறது. சென்னையில் பேசிய டொவினோ தாமஸ், “1957ல் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு சில நிகழ்வுகள் கலந்த கதை உருவாகியுள்ளது. இது மத சம்பந்தப்பட்ட கதையா, பேய் கதையா, திரில்லர், பழிவாங்கும் கதை என தற்போது சொல்ல முடியாது. எனது கதாபாத்திரம் மற்றும் பல விஷயங்களை சஸ்பென்ஸ் முறையில் வைக்கிறோம். படம் பார்க்கும்போது உண்மைகள் தெரியும்.
நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை; ரசிகர்களுடன் திரையரங்கில் தான் பார்க்க போகிறேன். ‘பள்ளிச்சட்டம்பி’ என்றால் தேவாலய காவலர் என்ற அர்த்தம். 2018 முதல் கதையை மேம்படுத்தி தற்போது எடுத்து வருகின்றோம். இதில் கயாடு லோஹர் ஹீரோயின். எனக்கும், துல்கர் சல்மானுக்கும் எந்த பிரச்னையும் இல்லை.
நாங்கள் அடிக்கடி பேசிக் கொள்கிறோம்.அதற்கு ஆதாரமாக வாட்ஸ்ஆப் சாட்டையும் காண்பிக்க தயார். சிலர் இதைப் படித்து சந்தோஷப்படுகிறார்கள், ஆனால் உண்மையில் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். நான் உதவி இயக்குனராக துல்கரின் ‘தீவிரம்’ படத்தில் பணியாற்றினேன்; அவருடன் இன்னொரு படத்தில் வில்லனாக நடித்தேன். லோகா படத்திலும் இணைந்தோம். தற்போது அடுத்த பாகம் எடுத்து வருகிறோம். சமீபத்தில் இந்த படத்துக்காக துபாயில் பயணம் செய்தோம்” என்றார்.
