பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங், ஆர். மாதவன், அக்ஷய் கண்ணா மற்றும் சாரா அர்ஜுன் ஆகியோர் நடித்த ‘துரந்தர்’ திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி உலகளவில் சுமார் 1350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முதல் பாகத்தின் இந்த வெற்றியைத் தொடர்ந்து, ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ என்ற பெயரில் அதன் இரண்டாம் பாகம் மார்ச் 19ஆம் தேதி வெளியானது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல இயக்குநர் எஸ். எஸ். ராஜமவுலி தனது சமூக வலைதளப் பதிவில் ‘துரந்தர் 2’ திரைப்படத்தை பாராட்டியுள்ளார். அதில், “எனக்கு ‘துரந்தர்-1’ மிகவும் பிடித்திருந்தது. ஆனால் ‘தி ரிவெஞ்ச்’ அதன் பிரம்மாண்டத்திலும் உணர்விலும் முதல் படத்தை விட மேலோங்கி நிற்கிறது. எழுத்து, நடிகர் தேர்வு, தொழில்நுட்ப தரம், இசை, உலக அமைப்பு மற்றும் இயக்கம் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன. குறிப்பாக, உணர்ச்சிப்பூர்வமான மோதல்கள் தான் இந்த படத்தை மேலும் உயர்த்துகின்றன. உணர்ச்சிகளால் நிரம்பிய உண்மையான பதற்றத்தை உருவாக்கும் விதத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆதித்யா தார், நீங்கள் மிகச்சிறப்பாக செய்துள்ளீர்கள். 4 மணி நேரம் நீளமான ஒரு படத்தை உருவாக்கி வெளியிடுவது துணிச்சலான முடிவு. கடைசி காட்சி வரை பார்வையாளர்களை கட்டிப்போடுகிறது. ரன்வீர் சிங், உங்கள் நடிப்பு அபாரமானது. ஆரம்பத்தில் சகோதரியுடன் வரும் காட்சி ஒரு பாடமாக இருக்கிறது. அதிலிருந்து கிளைமாக்ஸ் வரை ஹம்ஸா மற்றும் ஜஸ்கீரத் ஆகிய இரு பரிமாணங்களிலும் நீங்கள் பார்வையாளர்களை மெய்மறக்க செய்துள்ளீர்கள்.
மாதவன் அவர்கள், ஒரு நாட்டின் விரக்தி மற்றும் வலியை நீங்கள் மிக அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் வெற்றியை நாங்கள் எங்களுடையதாக உணர்கிறோம். இந்த மாபெரும் வெற்றிக்காக முழு படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
