இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிக்க உள்ள ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த திரைப்படம் அப்பா–மகன் உறவை மையமாகக் கொண்ட கதையாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சூராஜ் வெஞ்சாரமூடு நடிக்கும் நிலையில், மகன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார்.
இதற்கிடையில் எஸ்எஸ்டி என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஜெய் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்தை ‘எய்தவன்’ படத்தை இயக்கிய சக்தி ராஜசேகரன் இயக்க உள்ளார். சமகாலத்தில் அதிகரித்து வரும் முக்கியமான ஒரு சமூக பிரச்சினையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் ஆக்ஷன் த்ரில்லர் வகையில் உருவாக்கப்பட உள்ளது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தவிர நடிகர் ஜெய்யின் வசத்தில் தற்போது ‘கருப்பர் நகரம்’ மற்றும் ‘பிரேக்கிங் நியூஸ்’ ஆகிய திரைப்படங்களும் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக ஒரு பெரிய வெற்றி திரைப்படத்திற்காக ஜெய் காத்திருக்கிறார்.
