இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரணாசி’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மாறி மாறி நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் தண்ணீருக்குள் நடைபெறும் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சியை படமாக்க ராஜமவுலி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த காட்சியில் மகேஷ்பாபுவும், பிரியங்கா சோப்ராவும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக ஐதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டியில் மிகப்பெரிய நீச்சல் குள செட் அமைக்கப்பட்டு, ஒரு லாரிக்கு பத்தாயிரம் லிட்டர் வீதம் சுமார் 150 லாரி தண்ணீர் தேவைப்படுவதாக நகராட்சி அதிகாரிகளிடம் படக்குழு கோரிக்கை வைத்திருந்தது.
ஆனால் தற்போது ஐதராபாத்தில் கடுமையான கோடைக்கால வெப்பம் நிலவி வருவதாலும், பொதுமக்களின் குடிநீர் தேவையை முன்னிலைப்படுத்தியும், இவ்வளவு பெரிய அளவிலான தண்ணீரை படப்பிடிப்புக்காக வழங்க முடியாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் படப்பிடிப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகளை படக்குழு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த மே மாதம் முழுவதும் ஐதராபாத்திலேயே இப்படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
