மலைப்பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களையும் சமூக பிரச்னைகளையும் புதுமையான கோணத்தில் வெளிப்படுத்திய திரைப்படமாக ‘வெள்ளக்குதிர’ அமைந்தது. இந்த படத்தை இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கியிருந்தார். தற்போது அவர் இயக்கும் அடுத்த திரைப்படம் ‘மண்டவெட்டி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் நடிகை கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் டார்க் மற்றும் சூப்பர்நேச்சுரல் அம்சங்களைக் கொண்ட கிரைம் திரில்லர் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இழப்பு, அடையாளம் மற்றும் உயிர் பிழைப்பிற்கான போராட்டம் போன்ற கருத்துகளை மையமாகக் கொண்டு ஒரு பெண்ணின் உளவியல் மற்றும் உணர்ச்சிப் பயணத்தை ஆழமாக வெளிப்படுத்தும் விதமாக இந்த கதைக்களம் அமைந்துள்ளது. மனித உணர்வுகளின் ஆழம் மற்றும் அதன் பின்னால் மறைந்திருக்கும் மர்மம் ஆகியவற்றையும் இந்த படம் விவரிக்கிறது.
இந்த திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தினமும் சுமார் 100 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் பல கிராம மக்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக கிராம மயானத்தில் ஒரு முக்கியமான காட்சியை படமாக்கிய அனுபவம் படக்குழுவிற்கு மிகப் பெரிய சவாலாக அமைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கதையில் முக்கிய இடம் பெறும் ‘செஞ்சி’ என்ற கற்பனையான உள்ளூர் தெய்வ கதாபாத்திரம் திரைப்படத்திற்கு தனித்துவமான ஆன்மிக அம்சத்தையும் சேர்க்கிறது. படப்பிடிப்பு முழுவதும் அந்த தெய்வத்தின் அருள் தங்களை பாதுகாப்பாக வழிநடத்தியதாக படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.
