பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியாகவும், தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். தெலுங்கு சினிமாவில் அவருக்கென தனித்துவமான மற்றும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற அவர், தற்போது அந்த மாநிலத்தின் துணை முதல்வராகவும் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, அரசியல் பொறுப்புகள் காரணமாக சில மாதங்கள் திரைப்படங்களில் நடிப்பதை அவர் நிறுத்தி வைத்திருந்தார். பின்னர், தங்களின் முதலீட்டையும் நிலைமையையும் கருத்தில் கொண்டு தயாரிப்பாளர்களின் வேண்டுகோளை ஏற்று ‘ஹரிஹர வீர மல்லு’ மற்றும் ‘ஓஜி’ போன்ற படங்களில் மீண்டும் நடித்தார். அவற்றில் ‘ஓஜி’ திரைப்படம் உலகளவில் ரூ.350 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி பெரிய வெற்றியைப் பெற்றது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படத்தை இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கியுள்ளார். 2012ஆம் ஆண்டு வெளியான ‘கப்பர் சிங்’ திரைப்படத்திற்கு பிறகு பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் சங்கர் இணையும் இரண்டாவது படம் இதுவாகும். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கதாநாயகிகளாக ஸ்ரீலீலா மற்றும் ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் பவன் கல்யாண் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் இந்த திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
