நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு சுயசரிதை புத்தகத்தை எழுதி வருகிறார். அது இந்த ஆண்டிலேயே புத்தகமாக வெளியிடப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“சினிமா துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ரஜினிகாந்த் தனது வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகளையும் நினைவுகளையும் தொகுத்து சுயசரிதையாக எழுதி வருகிறார். மேலும், தற்போது அந்த பணிக்காகவே ரஜினிகாந்த் பெங்களூரு சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரது சுயசரிதை விரைவில் புத்தகமாக வெளிவரும் என்றும், இந்த ஆண்டிலேயே அது வெளியாகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சுயசரிதை எதிர்காலத்தில் திரைப்படமாக மாறுமா என்பது குறித்து தற்போது எந்தத் தகவலும் இல்லை. இருப்பினும் ரஜினிகாந்தின் மூத்த மகள் தனது தந்தையின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. எதிர்காலத்தில் அது நடைபெற வாய்ப்பு இருக்கலாம். இதற்கிடையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதன் பிறகு இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் படத்திற்கும் அவர் கால்ஷீட் வழங்கியுள்ளார்.
