தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அருள்நிதி. இவர் ‘வம்சம்’, ‘மவுனகுரு’, ‘டிமாண்டி காலனி’, ‘ஆறாது சினம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கே-13’, ‘டிமாண்டி காலனி 2’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார். கதாபாத்திரத் தேர்வுகளில் வித்தியாசத்தை கடைப்பிடித்து வரும் அருள்நிதி, தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களிடையே நிலையான வரவேற்பைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், ‘தகராறு’, ‘வீர சிவாஜி’, ‘தேன்’ போன்ற படங்களை இயக்கிய கணேஷ் விநாயக் இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘அருள்வான்’ ஆகும். இப்படத்தில் ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளதுடன், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், மே தினத்தை முன்னிட்டு ‘அருள்வான்’ படக்குழுவினர் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். வெளியிடப்பட்ட அந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், இப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
—
