மலையாளத்தில் வெளியான ‘பூதக்காலம்’ என்ற திகில் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராகுல் சதாசிவன். அந்த திரைப்படம் அவருக்கு நல்ல கவனத்தை பெற்றுத் தந்தது. அதன் பின்னர் நடிகர் மம்முட்டியை வைத்து அவர் இயக்கிய ‘பிரம்மயுகம்’ திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்த திரைப்படம் தென்னிந்திய அளவில் மட்டுமல்லாமல், அவர் கதை சொல்லிய விதம் காரணமாக பாலிவுட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடித்த ‘டயஸ் இரே’ என்ற ஹாரர் திரைப்படத்தையும் அவர் இயக்கினார்.இந்த திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று 100 கோடி ரூபாய் வசூலை கடந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராகுல் சதாசிவன் இயக்கும் படங்களுக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது தனது தனித்துவமான பாணியில் மீண்டும் ஒரு புதிய ஹாரர் திரைப்படத்தை இயக்க ராகுல் சதாசிவன் தயாராகி வருகிறார். இந்த படத்தில் நடிகர்கள் பிரித்விராஜ் மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக மலையாள திரைப்பட வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
