தெலுங்கு முன்னணி நடிகரும் ஆந்திரப் பிரதேசத்தின் தற்போதைய துணை முதல்வருமான பவன் கல்யாண், அரசியலிலும் சினிமாவிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அரசியல் பொறுப்புகளை மேற்கொண்டு கொண்டிருந்தாலும், ஏற்கனவே தொடங்கியிருந்த தனது திரைப்படங்களின் படப்பிடிப்புகளையும் முடித்து அவற்றை ஒவ்வொன்றாக வெளியிட முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வந்த ‘உஸ்தாத் பகத்சிங்’ திரைப்படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் மார்ச் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படம் தொடர்பாக ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக தன்னிடம் பேசப்பட்டிருந்த சம்பளத்தில் இருந்து பவன் கல்யாண் கணிசமான அளவு தொகையை விட்டுக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பே இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிய போது அவருக்கு சுமார் 5 கோடி ரூபாய் முன்பணம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் பவன் கல்யாணின் அரசியல் பயணம் காரணமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பலமுறை தள்ளிப் போனது. இதனால் படம் நீண்ட நாட்கள் தயாரிப்பில் தாமதமாகி கிடப்பில் போயிருந்தது. இதனால் தயாரிப்பாளருக்கு அதிகமான பொருளாதார சுமை ஏற்பட்டிருக்கும் என்பதை புரிந்துகொண்ட பவன் கல்யாண் தனது சம்பளத்தில் இருந்து பெரிய அளவு குறைத்துக் கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
