சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சமுத்திரக்கனி, தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பொதுமக்களுக்கு முக்கியமான எச்சரிக்கையை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது, முன்னாடி எல்லாம் வீட்டுக்குள் புகுந்து திருடுவாங்க. ஆனால் இப்போது வீடியோ கால் மூலமாகவே திருட ஆரம்பிச்சிட்டாங்க. இந்த எல்லா குற்றங்களும் நம்ம கையில் இருக்கும் இந்த போன் மூலம்தான் ஆரம்பிக்கிறது. இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற பல சமூக வலைத்தளங்களை நாம் பயன்படுத்துகிறோம்” என்றார்.
மேலும் அவர் பேசும்போது, போனை வைத்துக்கொண்டு நாம் சும்மா இருப்பதில்லை. வாழைக்காய் பஜ்ஜி போடுற மாதிரி எப்ப பார்த்தாலும் போனைத் தடவிட்டே இருக்கிறோம். இதை தெரிந்துகொண்டுதான் குற்றவாளிகள் நம்மை ஏமாற்றுகிறார்கள். பேயைப் பார்த்து பயப்படுறத விட ஏஐ பார்த்து பயப்படுறது அதிகமாயிருச்சு” என்று நகைச்சுவையாக கூறினார்.
அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சைபர் மோசடி சம்பவங்கள் நடந்தால் காவல்துறையின் 1930 என்ற உதவி எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே சைபர் குற்றங்களை குறைக்க முடியும் என்றும் சமுத்திரக்கனி குறிப்பிட்டார்.
