கடந்த ஆண்டு நடிகர் ரவி மோகன் தனது ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் முதன்முறையாக ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அதன் பின்னர் அந்த திரைப்படம் தொடர்பான எந்தவிதமான புதிய தகவல்களும் வெளியாகாமல் இருந்ததால், அந்த திட்டம் குறித்து ரசிகர்களிடையே சில சந்தேகங்களும் உருவாகியிருந்தன.
இந்த நிலையில் தற்போது அந்த திட்டம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நடிகர் ரவி மோகன் தானே தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்திற்கு ‘ஆன் ஆர்டினரி மேன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை விழா நேற்று நடைபெற்றது.
‘ஆன் ஆர்டினரி மேன்’ திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் பூஜை விழாவில் நடிகர் ரவி மோகன், யோகி பாபு, கெனிஷா பிரான்சிஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இதற்கிடையில் நடிகர் ரவி மோகன் தயாரிப்பில் மேலும் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. ‘ப்ரோ கோட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, அர்ஜூன் மற்றும் அசோகன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
