‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் த.செ. ஞானவேல். தனது முதல் திரைப்படத்திலேயே சமூக கருத்துகளை வலியுறுத்தும் கதைக்களத்துடன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது திரைப்படமாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘வேட்டையன்’ திரைப்படத்தை இயக்கும் அளவிற்கு உயர்ந்தார். இருப்பினும் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவில் அவர்களின் கூட்டணிக்கு பெரிய வெற்றியை பெற்றுத்தரவில்லை.
ஒரு புறம் தனது அடுத்த திரைப்படத்திற்கான பணிகளில் ஞானவேல் தயாராகி வரும் நிலையில், இன்னொரு புறம் அவர் எழுத்தாளராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். திரைப்பட இயக்குநராக மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் பல நூல்களை எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக ‘தமிழ் மண்ணே வணக்கம்’, ‘சொல்லாததும் உண்மை’, ‘திருப்புமுனை’ உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். தற்போது ‘மைல்கல்’ என்ற புதிய புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, தனது ‘மைல்கல்’ புத்தகத்தின் ஒரு பிரதியை அவருக்கு பரிசாக வழங்கியுள்ளார். இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஞானவேல் பகிர்ந்து கொண்டுள்ளார்.
