நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களின் திருமணம் கடந்த மாதம் 26ஆம் தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற்றது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. பரசுராம் இயக்கத்தில் உருவான அந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த பிரபலத்தை பெற்றதுடன், இருவரின் தொழில்முறை வாழ்க்கையிலும் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
இந்த திரைப்படம் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பு வாழ்க்கையில் மட்டுமல்லாமல், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக பலரும் கருதுகின்றனர். ஆனால் இந்த வெற்றி பெற்ற திரைப்படத்தில் முதலில் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டவர் ராஷ்மிகா மந்தனா அல்ல என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த திரைப்படத்தின் கதாநாயகி கதாபாத்திரத்திற்காக ஆரம்பத்தில் பல நடிகைகள் அணுகப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வரிசையில் ஆக்சன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ‘சீதா பயணம்’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான ஐஸ்வர்யா, ‘கீதா கோவிந்தம்’ பட வாய்ப்பை தவறவிட்டது குறித்து சமீபத்தில் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், “சீதா பயணம் திரைப்படத்திற்கு முன்பே எனக்கு தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சில காரணங்களால் அது நடைபெறவில்லை. பின்னர் அந்த திரைப்படம் பல நடிகைகளிடம் சென்றதாகவும் கேட்டேன். இறுதியில் அந்த திரைப்படம் மிகச் சிறப்பாக உருவாகி பெரிய வெற்றியை பெற்றது. நான் நடிக்க முடியாமல் தவறவிட்ட சில திரைப்படங்கள் பின்னர் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன” என்று தெரிவித்துள்ளார். மேலும் நடிகைகள் லாவண்யா திரிபாதி, ராஷி கண்ணா மற்றும் அனு இம்மானுவேல் ஆகியோரும் சில காரணங்களால் இந்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்ததாக கூறப்படுகிறது.
