கதிர் மற்றும் திவ்யபாரதி இணைந்து நடித்து வரும் புதிய திரைப்படம் ‘ஆசை’. இந்த படத்தை சுதன் சுந்தரம் தயாரித்து வருகிறார். இப்படத்தில் பூர்ணா, லிங்கா, அலெக்ஸாண்டர் சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு பெண் இசையமைப்பாளரான ரேவா இசையமைக்கிறார்.
இந்த படத்தை குறித்து இயக்குநர் ஷிவ் மோஹா கூறியதாவது, “நாயகியின் பிறந்தநாளில் ஒரு சிறிய விஷயத்திற்காக ஆசைப்பட்டு ஒரு செயலை செய்ய முயற்சிக்கும் காதல் ஜோடி, அதன் விளைவாக எதிர்பாராத சம்பவங்களில் சிக்கிக் கொள்கின்றனர். அந்த ஒரு முடிவு அவர்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் இழுத்துச் செல்கிறது, அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன, அந்த சிக்கல்களில் இருந்து அவர்கள் எவ்வாறு மீள்கிறார்கள் என்பதையே இந்த கதையின் மையமாக எடுத்துள்ளோம்.
இது ஒரு காதல் த்ரில்லர் திரைப்படம். இந்த கதைக்கு பல்வேறு தலைப்புகளை யோசித்தபோதும், ‘ஆசை’ என்ற தலைப்புதான் மிகவும் பொருத்தமாக அமைந்தது. நடிகர் அஜித் நடித்த ‘ஆசை’ படத்தின் தயாரிப்பாளரிடம் முறையான அனுமதி பெற்று தான் இந்த தலைப்பை பயன்படுத்தியுள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.
