நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது திரைப்படம் வெளியீட்டை முன்னிட்டு பின்னணிப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’ உள்ளிட்ட படங்களின் எழுத்தாளரான ஆனந்த் அண்ணாமலை, இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு என பல்வேறு பொறுப்புகளை ஒரே நேரத்தில் கவனித்துள்ளார். யோகிபாபுவுடன் கிஷோர், விதார்த், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மனித உணர்வுகளையும் ஆன்மிகத் தேடலையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், தற்போது டப்பிங், ஒலிவடிவமைப்பு, பின்னணி இசை மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மற்றும் வெளியீட்டு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது.
