தமிழில் ‘டாக்டர்’, ‘டான்’, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘கேப்டன் மில்லர்’ போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றவர் நடிகை பிரியங்கா மோகன். சமீபத்தில் நடிகர் தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் கவின் நடித்து வரும் அவரது ஒன்பதாவது திரைப்படத்திலும், ‘மேட் இன் கொரியா’ உள்ளிட்ட படங்களிலும் பிரியங்கா மோகன் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சூழலில் அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், மறைந்த நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட திரைப்படம் உருவானால் அதில் நடிக்கத் தான் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, சவுந்தர்யா சினிமாவிற்கு அறிமுகமான வேகத்திலேயே தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக், சிரஞ்சீவி, நாகார்ஜுனா உள்ளிட்ட பல பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். மிகக் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்த அவர், தனது இயல்பான நடிப்பாலும், முக வசீகரத்தாலும் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்தார்.
அத்தகைய புகழ்பெற்ற நடிகையின் கதாபாத்திரத்தில் நடிப்பது ஒரு பெரிய பொறுப்பு என்றும், அந்த வாய்ப்பு கிடைத்தால் முழு அர்ப்பணிப்புடன் அதை செய்துசெய்யத் தயாராக இருப்பதாகவும் பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக சிறிய விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது நிகழ்ந்த விபத்தில், வெறும் 31வது வயதில் நடிகை சவுந்தர்யா உயிரிழந்தது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
