நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘தாய்க்கிழவி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மதுரையில் அமைந்துள்ள செல்லூர் கோபுரம் திரையரங்கில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை ராதிகா உள்ளிட்டோர் திரைப்படத்தை காண வந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன், திரைப்படம் குறித்தும் தனது நிலைப்பாடு குறித்தும் கருத்து தெரிவித்தார். “ஒரு திரைப்படம் மக்களின் மனதில் சென்றடைந்துவிட்டால் அது நாடு முழுவதும் பேசப்படும் படமாக மாறிவிடும். கல்லூரிக்கு செல்லாமல், பட்டப்படிப்பு பெறாமல் குடும்ப பொறுப்புகளை மேற்கொள்ளும் பெண்கள் இந்தியாவில் ஏராளமாக உள்ளனர். எனக்கு இடையூறு தருபவர்கள் யார் என பலர் கேட்கிறார்கள். அதை வெளிப்படையாகச் சொன்னால் இணையதளத்தில் அதிக பார்வைகள் கிடைக்கும். ஆனால் பிறரை குறை கூறும் நோக்கில் நான் பேசுவதில்லை. பல சவால்களை கடந்து தான் ஒரு திரைப்படம் உருவாகிறது என்பதையே நான் வலியுறுத்துகிறேன். திரைப்படத்தில் அரசியல் குறித்து பேசலாம், ஆனால் நிஜ வாழ்க்கையில் அரசியல் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. நான் ஒரு நல்ல நடிகராகவும், சிறந்த தயாரிப்பாளராகவும் உருவாக வேண்டும் என்பதே என் விருப்பம்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், திரைப்படங்களில் பொழுதுபோக்கைத் தாண்டி அரசியல் கருத்துக்கள் அதிகமாக இடம்பெறுகின்றனவா? என்ற கேள்விக்கு, எல்லா காலத்திலும் அரசியல் இருந்தே வருகிறது. அதில் தவறு எதுவும் இல்லை என்று பதிலளித்தார். நடிகர் அஜித்தை வைத்து படம் தயாரிப்பீர்களா? என்ற கேள்விக்கு, நான் தற்போது சிறிய தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்கள் தயாரித்து வருகிறேன். இன்னும் பெரிய நிறுவனமாக வளரவில்லை. ஒருவேளை நடிகர் அஜித் சம்மதித்தால், அந்தப் பொறுப்பை சிறப்பாக மேற்கொள்வேன். அத்தகைய திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடும் திருவிழாவாக அமையும். அது எனது கனவாகும் என்று கூறினார்.
அஜித் குமார் அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். எனினும், அந்தப் படத்திற்கு தயாரிப்பாளர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும், அந்த திரைப்படத்தில் மோகன்லால் இணைவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
