இயக்குநர் மாரி செல்வராஜ் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “விஜய் சாரின் திரைப்படங்கள் மீது எனக்கு தனிப்பட்ட பற்று உள்ளது. நான் திரைப்படத் துறைக்குள் வர வேண்டும் என்ற எண்ணம் உருவாக அவரும் ஒரு முக்கிய காரணம். ஒரு ரசிகனாக விஜயை நான் மிகவும் விரும்புகிறேன். நான் சினிமாவுக்கு வரத் தூண்டியவர்களில் முக்கியமானவர் விஜய்தான். திரையரங்கிற்கு சென்று படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்கியவரும் அவரே” என்று தெரிவித்தார்.
விஜயின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் நலனுக்காக செயல்படலாம். அரசியலுக்கு வருபவர்களை நாம் வரவேற்க வேண்டும். அவரின் அரசியல் நிலைப்பாடுகள் முழுமையாக வெளிப்பட்ட பிறகு அதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று கூறினார்.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பைசன்’. இதில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது நடிகர் தனுஷுடன் மீண்டும் இணைந்து புதிய திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.
