நடிகர் விஜய்சேதுபதி மற்றும் இயக்குநர் மணிகண்டன் இணையும் போதெல்லாம் அந்த கூட்டணிக்கு ரசிகர்களிடையே தனிப்பட்ட வரவேற்பு கிடைப்பது வழக்கம். இவர்கள் சேர்ந்து உருவாக்கிய ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ திரைப்படங்கள் விமர்சகர்களாலும், திரைப்பட விழாக்களாலும் பாராட்டப்பட்டு பல்வேறு விருதுகளை பெற்றன. சமூக உணர்வுகளையும் மனிதநேய கோணங்களையும் பிரதிபலிக்கும் படைப்புகளாக அவை அமைந்தன.
இந்த நிலையில், விஜய்சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கியுள்ள புதிய இணையத் தொடரான ‘முத்து என்கிற காட்டான்’ வரும் மார்ச் 27ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஒளிபரப்பு தளத்தில் வெளியாக உள்ளது. இதன் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த தொடரில் ‘காட்டான்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய்சேதுபதி, உடல் இன்றி தலையுடன் தோன்றும் விதமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த உருவாக்கம் பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை அளிக்கிறது. “நீங்கள் காட்டானை தேடவில்லை; காட்டான்தான் உங்களைத் தேடுகிறார்” என்ற உரையுடன் முன்னோட்டம் நிறைவடைகிறது. மதுரை பின்னணியில் கதை நகர்வதாக கூறப்படுகிறது. இந்த இணையத் தொடரை மணிகண்டனே தயாரித்துள்ளார். இந்தி நடிகர் மிலிந்த் சோமன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரை மணிகண்டன் இயக்கிய படைப்புகளில் அதிரடி அம்சங்கள் குறைவாக இருந்த நிலையில், இந்த தொடர் அதிரடி கலந்த கதையாக உருவாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
