தமிழ் நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தமிழக முதல்வர் விஜய் செப்டம்பர் 10ஆம் தேதி பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்கும் லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை செப்டம்பர் 12ஆம் தேதி சனிக்கிழமை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பந்தயத்தை நடத்தும் ‘லீ மேன்ஸ்’ அமைப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்புகளை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாக இந்தப் பயணம் அமைய உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக உலகப் புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’ நேரில் சென்று பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உருவாக்கப்பட உள்ள மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத்திற்கான உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு அம்சங்களை சிறப்பாக அமைக்க இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் தனது நண்பர் அஜித்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து கலந்துரையாட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
