சில மாதங்களுக்கு முன்பு இந்தியில் வெளியான துரந்தர் திரைப்படம் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்று பெரிய அளவில் வெற்றி கண்டது. இந்த படத்தில் ரன்வீர் சிங், அக்ஷய் கண்ணா, மாதவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குநர் ஆதித்யா தர் இயக்கிய இந்த திரைப்படம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல மதிப்பீடுகளை பெற்றது. கதை, நடிப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து படத்தை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றன.
இந்த மிகப்பெரிய வெற்றியின் பின்னர், படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டன. முதல் பாகம் வெளியானதிலிருந்து சுமார் மூன்று மாதங்களுக்குள் அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் வரும் மார்ச் 19ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் நடிகர் மாதவன், ரசிகர்கள் தங்களிடம் காட்டும் அன்பும் நம்பிக்கையும் குறித்து மனமுவந்து பகிர்ந்துள்ளார்.
அதாவது, துரந்தர் திரைப்படம் ஐக்கிய அரபு நாடுகளில் திரையிட தடை செய்யப்பட்டபோது, அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பல ரசிகர்கள் விமானம் பிடித்து இந்தியாவுக்கு வந்தார்கள். அங்கு இணைய தொலைக்காட்சி வாயிலாக பார்க்கும் வசதியும் இருந்தபோதிலும், பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களை இங்கே வர வைத்தது. தற்போது அதே அளவிலான எதிர்பார்ப்பு துரந்தர் 2 படத்திற்கும் உருவாகியுள்ளது. ஒரு படைப்பின் வெற்றிக்கு ரசிகர்கள் முக்கியமான காரணம், அவர்கள் சரியானதை தேர்ந்தெடுப்பார்கள் என நம்பிக்கை உள்ளது.
