70வது தென்னிந்திய பிலிம்பேர் விருது விழா கேரளாவில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விருது விழாவில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. அந்த படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட மொத்தம் 8 விருதுகளை வென்று பெரும் சாதனை படைத்துள்ளது. இதனால் அந்த திரைப்படக் குழுவினரும் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த விழாவில் விருதை பெற்ற பிறகு மேடையில் சிவகார்த்திகேயன் பேசிய வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. விருதைப் பற்றி பேசும்போது அவர் கூறியதாவது: “இந்த பிலிம்பேர் விருதுதான் நான் பெறும் முதல் விருது. 13 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக இந்த விழாவுக்கு நடிகர் தனுஷ் சாருடன் தான் வந்தேன். அப்போது அவர் ‘சும்மா வா… ஜாலியாக போயிட்டு வரலாம்’ என்று என்னை அழைத்துக் கொண்டு வந்தார். அந்த நேரத்தில் எனக்கு இரண்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று முதல் வரிசையில் உட்கார்ந்து இந்த விருதை பெறுவதற்கு 13 ஆண்டுகள் எடுத்திருக்கிறது.
‘அமரன்’ திரைப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது ‘அமரன் எனக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும்’ என்று நான் கூறினேன். அதுபோல இந்த திரைப்படம் இன்னும் எனக்கு விருதுகளைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கிறது. அதற்குக் காரணமான முகுந்த் வரதராஜன் அவர்களின் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றி. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் நன்றி. இந்த படத்திற்காக நான் கமல்ஹாசன் சாரின் அலுவலகத்திற்கு சென்றபோது அங்கு இருந்த ஏராளமான பிலிம்பேர் விருதுகளை பார்த்தேன். அப்போது ‘அமரன் படத்திற்காக எனக்கும் ஒரு விருது கிடைக்கும்’ என்று நினைத்தேன். இன்று அது நனவாகியுள்ளது.
எவ்வளவு பேர் என்னை விமர்சித்தாலும், தள்ளி வைத்தாலும், தொடர்ந்து என்னை உயர்த்தி மேடையில் நிற்கச் செய்தது நீங்கள் தான். உங்களுக்கு பிடித்த சிவாண்ணா இன்று பிலிம்பேர் விருதுடன் உங்கள் முன்னால் நிற்கிறேன்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
