இந்தி திரைப்பட உலகில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்து வருபவர் ஷாருக்கான். தற்போது ‘வார்’ மற்றும் ‘பதான்’ போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்ற சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படத்தில் அவர் நடித்துவருகிறார். இந்த திரைப்படத்தில் அவரது மகள் சுஹானா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கிங்’ திரைப்படத்தின் தலைப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது. மேலும், இந்த திரைப்படம் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடித்துவரும் ஷாருக்கான், பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார். சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். இந்தி திரையுலகில் அவர் “கிங் கான்” என அன்புடன் அழைக்கப்படுகிறார். தொலைக்காட்சி தொடர்களின் மூலம் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்து வருகிறார். “பாலிவுட் கிங்”, “பாட்ஷா” போன்ற பட்டங்களுடன் ரசிகர்களின் மனதில் தனித்திடம் பெற்றுள்ளார். சினிமா துறையைத் தாண்டியும் கிரிக்கெட் தொடர்பான தொழிலிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
“கிங்” என்ற பட்டம் குறித்து ஒருமுறை நிருபர்கள் கேட்டபோது, அது அதிகாரத்தை குறிக்கும் சொல்லாக தன்னால் ஒருபோதும் கருதப்படவில்லை என்று ஷாருக்கான் விளக்கமளித்தார். அது ஒரு பொறுப்பை நினைவூட்டும் சொல் என்றும், தன்னை நம்பும் மக்களிடமும், தாம் தேர்ந்தெடுத்து சொல்லும் கதைகளிடமும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற கடமையை உணர்த்துவதாகவும் கூறினார்.
இயக்குநர் அனுபவ் சின்ஹா, ஷாருக்கான் குறித்து பேசும்போது, இந்தி திரையுலகில் ஒரு முக்கியமான மாற்றத்தை அவர் ஒருவரே உருவாக்கியதாக குறிப்பிட்டார். ஷாருக்கான் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு, கதாநாயகிகள் மேடையில் ஏறும்போது கைகொடுத்து உதவுவது போன்ற மரியாதையான நடைமுறைகள் பொதுவாக காணப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், 2013ஆம் ஆண்டு முதல் தனது திரைப்படங்களின் தலைப்புக் குறிப்புகளில், தனது பெயருக்கு முன்பாகவே கதாநாயகிகளின் பெயரை இடம்பெறச் செய்யும் பழக்கத்தை ஷாருக்கான் கொண்டு வந்ததாகவும், அது திரைத்துறையில் நிலவிய பாரம்பரிய போக்கை மாற்றியதாகவும் அவர் கூறினார்.
