நடிகர் யாஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘த டாக்ஸிக்’ திரைப்படத்தை நடிகை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் டீஸர் வெளியாகிய பின்னர் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அதில் ஆபாசமான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைத்து கர்நாடக மாநில மகளிர் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும், கர்நாடகத்தைச் சேர்ந்த சில கிறிஸ்தவ அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்துள்ளன.
இதனையடுத்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சார்பிலும் தலைமைச் செயலர், உள்துறை அமைச்சர் மற்றும் தணிக்கைவாரியத்திடம் முறையிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து திரைப்பட வர்த்தக சபைத் தலைவரும் நடிகையுமான ஜெயமாலா விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, டாக்ஸிக் திரைப்படத்தின் டீஸர் குறித்து புகார்கள் வந்துள்ளன. ஆனால் அதில் துல்லியமாக என்ன தவறு உள்ளது என்பதை நான் அறியவில்லை. டீஸர் என்பது பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட சிறிய முன்னோட்டம் மட்டுமே. முழு திரைப்படத்திற்கான தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படாத நிலையில், படத்தைப் பற்றி முன்கூட்டியே விவாதிப்பது பொருத்தமானதல்ல. தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்துள்ளனர். எனவே முழு திரைப்படத்தையும் பார்த்த பிறகே கருத்து தெரிவிக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
