திரையுலகில் இன்று பிரபலமாக விளங்கும் பலரும் தங்களின் ஆரம்ப காலத்தில் பல்வேறு வேலைகளை செய்து வாழ்க்கையை முன்னெடுத்துள்ளனர். அந்த வரிசையில் தொகுப்பாளரும் நடிகையுமான ஸ்ராவந்தி சோகாரப்பு தனது தொடக்க காலப் போராட்டங்களை சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டு உணர்ச்சிவசப்பட்டார். வாழ்க்கையில் முன்னேறுவதற்காக சந்தித்த சிரமங்களையும் தடைகளையும் அவர் திறந்த மனதுடன் வெளிப்படுத்தினார்.
பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே அறிமுகமான அவர், “ஆறாம் வகுப்பு படித்த காலத்திலிருந்தே மெஹந்தி போட்டு பணம் சம்பாதிக்க ஆரம்பித்தேன். ஒரு அழகுக்கூடத்துடன் இணைந்து மெஹந்தி கலைஞராக பணியாற்றினேன்” என்று தெரிவித்துள்ளார். நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த அனுபவமும் இருந்ததாகவும் அவர் கூறினார்.
ஆனால் தனிப்பட்ட காரணங்களால் திரைப்பட வாய்ப்புகளை விட்டு விலக வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக ஐதராபாத் பஞ்சகுட்டாவில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனையாளர் பணியில் சேர்ந்ததாகவும் கூறினார். அங்கு நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை காரணமாக உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டதால் அந்த வேலையை விட்டு வெளியேறினார் என்றும் தெரிவித்தார். அதன் பின்னர் நண்பர் அபிராமின் உதவியுடன் ஒரு தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்தே தனது தொகுப்பாளர் பயணம் தொடங்கியது என்றும், கடின உழைப்பின் மூலமே இன்று இந்த நிலையை அடைந்துள்ளேன் என்றும் ஸ்ராவந்தி சோகாரப்பு நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.
