‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழித் திரையுலக்களிலும் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சாய் பல்லவி, தற்போது பல முக்கியமான திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தற்போது இந்தியில் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்காமல், தனது பணியில் மட்டும் கவனம் செலுத்தும் நடிகையாக சாய் பல்லவி அறியப்படுகிறார்.
படப்பிடிப்பு இடைவெளிகளிலும், ஓய்வு நேரங்களில் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை விரும்பும் சாய் பல்லவி, தற்போது ஜப்பான் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பனிப்பொழிவு நிறைந்த சூழலில் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே வேகமாக வைரலாகி வருகின்றன. “புதுவெள்ளை மழை பொழிகின்றதே” என்ற கேப்ஷனுடனும், ‘பிரேமம்’ திரைப்படத்தின் “மலரே…” பாடல் வரிகளையும் இணைத்து, ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பரவலாக பகிர்ந்து வருகிறார்கள்.
சாய் பல்லவி தற்போது நடித்து வரும் ‘ராமாயணம்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதன் முதல் பாகம் 2026ஆம் ஆண்டு தீபாவளியிலும், இரண்டாம் பாகம் 2027ஆம் ஆண்டு தீபாவளியிலும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்திலும், ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திலும், நடிகர் யாஷ் ராவணன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
