‘புஷ்பா-2’ திரைப்படத்தை தொடர்ந்து, அட்லி இயக்கத்தில் உருவாகும் சயின்ஸ் பிக்சன் திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். இந்த பிரம்மாண்டமான படத்தில் அவருடன் தீபிகா படுகோனே, மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றி வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக அல்லு அர்ஜுன் பெறும் சம்பளம் தொடர்பான தகவல் டோலிவுட் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதில், அட்லி இயக்கும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்குப் பதிலாக, படத்தின் லாபத்தில் தனக்கு 30 சதவீதம் ஷேராக வழங்க வேண்டும் என்று அவர் தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதேபோன்ற முறையில் தான் ‘புஷ்பா-2’ திரைப்படத்திலும் லாபத்தில் ஷேர் பெற்றிருந்தார் அல்லு அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தற்போது ‘வாரணாசி’ திரைப்படத்தை இயக்கி வரும் பிரபல இயக்குனர் ராஜமவுலியும், அந்த படத்தின் வெளிநாட்டு உரிமைகளை தனது சம்பளமாக வழங்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி இருப்பதாக டோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
