பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார். ஆனால், சில நாட்களில் அரசியல் துறையில் தனக்கு அதிக ஆர்வம் இல்லை என பேட்டிகளில் கூறத் தொடங்கினார். இந்நிலையில், நாடாளுமன்றத்திற்குச் சென்றதன் மூலம் அவருக்கு ஒரு நல்ல நண்பர் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. கங்கனா ரனாவத்தும், ராம் விலாஸ் பஸ்வானின் மகனான சிராக் பஸ்வானும் தற்போது பல பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களின் நட்பு காதலாக மாறியிருக்கலாம் என்ற செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இந்த வதந்திகள் குறித்து சிராக் பஸ்வான் எந்த பதிலும் அளிக்காத நிலையில், கங்கனா ரனாவத் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: “நான் அவரை காதலிக்கவில்லை. சிராக் எனக்கு ஒரு நல்ல நண்பர். நான் அவரைப் பார்க்கும் போது ஒரு நண்பராகவே பார்க்கிறேன். எங்களுக்குள் எந்த விதமான காதல் உறவும் இல்லை. உண்மையைச் சொன்னால், அவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்போது தான் எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது. அதன் பின்னர் எங்கள் நட்பில் எந்த மாற்றமும் இல்லை. நான் காதல் உறவை விரும்பியிருந்தால் அது இதுவரை நடந்திருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. அவர் சினிமா துறையிலிருந்து வந்தவர் என்பதால், அவரை நான் நன்றாகப் புரிந்துகொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கங்கனா ரனாவத்தும் சிராக் பஸ்வானும் முதன்முதலில் 2011ஆம் ஆண்டு தன்வீர் கான் இயக்கிய ‘மைலே நா மைலே ஹம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். இந்தப் படத்தின் மூலம் சிராக் பஸ்வான் சினிமாவில் அறிமுகமானார். கங்கனா அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் இருவரும் அரசியல் துறையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
